தமிழில் தொகுப்பு : எம்.கிரிஜா
கோவிட் நோய்த்தொற்று துவங்கியதிலிருந்து ஒவ்வொரு பரிமாணத் திலும் அசமத்துவம் செங்குத்தாக அதிகரித்துள்ளது.
செல்வ அசமத்துவம்
ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய புள்ளிவிவ ரங்களை ஆக்ஸ்பாம் நிறுவனம் ஆய்வு செய்தது. அதன்படி,
இந்த உலகத்தில் 2,668 மகாகோடீஸ்வரர்கள் உள்ளனர். 2020ல் நோய்த்தொற்று துவங்கிய போது இருந்ததை விட இது 573 அதிகமாகும்.
இந்த மகாகோடீஸ்வரர்களின் ஒட்டுமொத்த சொத்துக்களின் மதிப்பு 12.7 டிரில்லியன் (1 டிரில்லியன்= 1 லட்சம் கோடி) டாலர்கள் ஆகும். கோவிட்-19 நோய்த்தொற்று காலத்தில் இவர்களது சொத்துக்களின் உண்மை மதிப்பு 3.78 டிரில்லி யன் டாலர்கள் (42%) அதிகரித்துள்ளது.
மகாகோடீஸ்வரர்களின் மொத்த சொத்துக்கள், உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 13.9% ஆகும். இது 2000ஆம் ஆண்டில் இருந்த அளவை விட 4.4% அதிகரித்துள்ளது.
பணக்கார 20 மகாகோடீஸ்வரர்களின் சொத்துக்களின் மதிப்பு, ஒட்டுமொத்த சப்-சஹாரா ஆப்பிரிக்காவை விட கூடுதலாகும்.
உலகின் மிகப் பெரிய செல்வந்தரான எலான் மஸ்க் தனது சொத்துக்களில் 99%ஐ இழந்தாலும், உலகின் 0.0001% சொத்துக்களை கொண்டுள்ள மிகப் பெரிய பணக்காரர்களின் பட்டியலில் முதல் வரிசையில் இடம் பெற்றிருப்பார். 2019ஆம் ஆண்டிலிருந்து இவரது சொத்துக்கள் 699% அதிகரித்துள்ளது.
வருமான அசமத்துவம்
கோவிட்-19 ஏற்கனவே வருமான அசமத்துவத்தை இதற்கு முன்னெப்போதும் பார்த்திராத அளவுக்கு மிகப் பெரிய அளவில் அதிகரிக்கச் செய்து வருகிறது. ஏழைகளின் வருமானத்தை கடுமையாக பாதித்து வருகிற உணவு மற்றும் எரிபொருட்களின் வேகமான விலை உயர்வு, உலகளவிலான அசமத்துவத்தை மேலும் அதிகரிக்கச் செய்து வருகிறது.
கோவிட்-19 நோய்த்தொற்றின் காரணமாக 99% மக்களின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது. இது, 2021ம் ஆண்டில் 12.5 கோடி முழுநேர வேலை இழப்புகளுக்கு சமமாகும்.
பெருஞ்செல்வந்தர்களாக உள்ள 1 சதவீதத்தினரில் யாரேனும் ஒருவர் ஓராண்டு காலத்தில் ஈட்டும் வருமானத்தை அடித்தட்டினராக உள்ள 50 சதவீதத்தினரில் ஒரு சராசரி மனிதன் ஈட்ட விரும்பினால் 112 ஆண்டுகள் தேவைப்படும்.
நோய்த்தொற்று துவங்கிய காலத்தில் தங்களது வருமானங்களில் ஏற்பட்ட இழப்பை பெருஞ்செல்வந்தர்கள் ஏற்கனவே வேகமாக ஈடுகட்டிவிட்ட அதே நேரத்தில், ஏழைகளின் வருமானங்களில் ஏற்பட்ட இழப்புகள் இன்னமும் ஈடுகட்டப்பட வேண்டியுள்ளது. இது வருமான அசமத்துவத்தை அதிகரிக்கச் செய்கிறது.
2021ஆம் ஆண்டில், மிகுந்த வறியவர்களாக உள்ள 40 சதவீதத்தினர் வருமானத்தில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தனர். இந்த வீழ்ச்சியானது, நோய்த்தொற்றுக்கு முந்தைய கணிப்புகளை விட சராசரியாக 6.7% குறைவானதாக இருந்தது. நோய்த்தொற்று வருமான அசமத்துவம் அதிகரிக்க வழிவகுத்தது. கினி குறியீட்டின் அளவீட்டின்படி 2000த்தின் துவக்கத்திலிருந்து வருமான அசமத்துவம் குறைந்து வந்தது. ஆனால், 2020ஆம் ஆண்டில் இது வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் 0.3% அதிகரித்தது.
பாலின அசமத்துவம்
ஏற்கனவே பொருளாதாரத்தில் நீடித்து வரும் பாலின அசமத்துவங்கள் நோய்த்தொற்றால் ஆழமடை வதை தடுக்க அரசுகள் தவறிவிட்டன. நோய்த்தொற்று காலத்தில் பெண்கள் மிக அதிக எண்ணிக்கையில் வேலையிலிருந்து வெளியில் தள்ளப்பட்டனர். குறிப்பாக ஊரடங்குநிலைகளும், தனிமனித இடை வெளிகளும், அதிகளவில் பெண்மைப்படுத்தப்பட்ட வேலைகளைக் கொண்ட சுற்றுலா, விருந் தோம்பல் மற்றும் பராமரிப்பு போன்ற சேவைத் துறைகளை பாதித்ததால் அவற்றில் பணிபுரிந்த பெண் தொழிலாளர்கள் பெரும் எண்ணிக்கையில் வெளியேற்றப்பட்டனர். எந்தவித ஊதியமும் இல்லாத வேலைகளின் அதிகரிப்பு, லட்சக்கணக்கான பெண்கள் மீண்டும் உழைப்புச் சந்தையில் சேரு வதைத் தடுக்கிறது. மேலும் தற்போது, உலகம் முழு வதிலும், தங்களது குடும்பத்தினருக்கு உண வளித்திட உணவு மற்றும் எரிபொருட்களின் விலை களின் மிகப்பெரிய உயர்வை பெண்கள் சமாளிப் பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலின இடைவெளியானது அதிகரித்துள்ளது – இந்த இடைவெளியை நீக்கிட 100 ஆண்டுகள் தேவைப்படும் என நோய்த்தொற்றுக்கு முன்பு மதிப்பிடப்பட்டிருந்தது. பாலின இடைவெளியை நீக்கிட தற்போது 136 ஆண்டுகள் தேவைப்படும்.
2020ஆம் ஆண்டில், ஆண்களை விட 1.4 மடங்கு கூடுதலாக பெண்கள் தொழிலாளர் படையை விட்டு வெளியேறும் வாய்ப்பிருந்தது. மேலும், ஆண்களை விட 3 மடங்கு கூடுதல் நேரம் ஊதியம் இல்லாத பராமரிப்பு வேலைகளை பெண்கள் மேற்கொண்டனர்.
2021ஆம் ஆண்டில், 2019 உடன் ஒப்பிடும்போது அப்போது வேலையில் இருந்த பெண்களை விட 1.3 கோடி பெண்கள் குறைந்துள்ளனர். அதே நேரத்தில், 2019ல் இருந்த நிலைக்கு ஆண்களின் வேலைவாய்ப்பு ஓரளவு மீண்டுள்ளது.
லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் 4 மில்லியனுக்கும் கூடுதலான பெண் தொழிலாளர்களால் தங்களது வேலைகளுக்கு திரும்ப இயலவில்லை. பெருமளவிலான முறைசாரா துறை சார்ந்த வேலைவாய்ப்புகளாலும், அதிகரிக்கும் பராமரிப்பு பணிகளாலும் இத்தகைய போக்கு ஊக்குவிக்கப்பட்டுள்ளது
இன அசமத்துவம்
தொற்றுநோய் உலகம் முழுவதிலும் ஏராளமான சிறிய இனக் குழுக்களை கடுமையாகப் பாதித்துள்ளது. அடிமைத்தனம் மற்றும் காலனித்துவம் உள்ளிட்ட வெள்ளை மேலாதிக்கத்தின் வரலாற்று மரபுகளுடன் இது நேரடியாக தொடர்பு கொண்டுள்ளது. பிரேசில் நாட்டின் ஆப்ரோ சந்ததியினர் மற்றும் பழங்குடி யினர், இந்தியாவின் பட்டியலினத்தவர் மற்றும் அமெரிக்காவின் பூர்வீக அமெரிக்கர்கள், லத்தீன் மற்றும் கறுப்பின மக்கள் தொற்றுநோயால் அளவுக்கு மீறிய நீடித்த தாக்கங்களை எவ்வாறு எதிர்கொண்டு வருகின்றனர் என்பதற்கான எடுத்துக்காட்டுகளை இதற்கு முந்தைய ஆக்ஸ்பாம் ஆய்வு கண்ட றிந்துள்ளது.
கோவிட் நோய்த்தொற்றின் இரண்டாவது அலையின்போது இங்கிலாந்தில் வங்கதேச வம்சாவளியினர், வெள்ளையின பிரிட்டிஷ் மக்களோடு ஒப்பிடுகையில் அவர்களை விட 5 மடங்கு கூடுதலாக உயிரிழப்பதற்கான வாய்ப்பிருந்தது.
வெள்ளையர்களின் ஆயுட்காலம் போன்றே கருப்பின அமெரிக்கர்களின் ஆயுட்காலமும் இருந்திருந்தால் இன்று கூடுதலாக 3.4 மில்லியன் கருப்பின மக்கள் உயிருடன் இருந்திருப்பார்கள். கோவிட்-19க்கு முன்பு, இந்த திகிலூட்டும் எண்ணிக்கை ஏற்கனவே 2.1 மில்லியனாக இருந்தது.
அமெரிக்காவில் உள்ள கருப்பினத்தைச் சார்ந்த உழைக்கும் பெண்களில் பாதிப்பேர் ஒரு மணி நேரத்திற்கு 15 டாலருக்கும் குறைவாகவே சம்பாதிக்கின்றனர். 15 டாலர் என்பது அமெரிக்காவில் குறைந்த வருமானம் ஈட்டும் தொழிலாளர்களை வேறுபடுத்திட பரவலாகப் பயன்படுத்தப்படும் வரம்பு ஆகும்.
சுகாதார அசமத்துவம்
தரமான சுகாதார பாதுகாப்பு என்பது மனித உரிமையாகும். ஆனால், இது பெரும்பாலும் ஆடம்பர மான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. உங்களது சட்டைப்பையில் அதிக பணம் வைத்திருப்பதன் மூலம் சுகாதார வசதிகளைப் பெறுவதோடு மட்டுமின்றி, நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்வும் உங்களுக்கு கிடைக்கிறது.
அதிக வருமானம் கொண்ட நாடுகளில் உள்ள மக்களின் ஆயுட்காலம் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் உள்ளவர்களை விட 16 ஆண்டுகள் கூடுதலாக உள்ளது.
ஏழை நாடுகளில் சுகாதார வசதியின்மையால் ஆண்டுதோறும் சுமார் 50 லட்சம் முதல் 60 லட்சம் மக்கள் உயிரி ழக்கின்றனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நாளொன்றுக்கு 15,000க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர்.
பிரேசில் நாட்டின் சாவோ பாலோவில், ஏழ்மையான பகுதிகளில் வசிக்கும் மக்களை விட செல்வ வளம் மிக்க பகுதிகளில் வசிக்கும் மக்கள் 14 ஆண்டுகள் கூடுதலாக உயிரோடு வாழ்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதியாக, சுகாதார வசதிகளைப் பெற இயலாமை உள்ளிட்ட அசமத்துவம், ஒவ்வொரு 4 விநாடி களுக்கு குறைந்தது ஒருவரை உயிரிழக்கச் செய்கிறது.
நோய்தொற்றும், அதை எதிர்கொள்வதில் உலகம் அடைந்த தோல்வியும் இத்தகைய மாபெரும் சுகாதார அசமத்துவத்தை அம்பலப்படுத்தியதோடு, அவற்றுக்கு துணைபுரிந்ததோடு, அவற்றை மேலும் மோசமாக்கியுள்ளன.
நோய்தொற்றின் விளைவாக, பணக்கார நாடுகளில் உயிரிழந்தவர்களை விட நான்கு மடங்கு கூடுதலான மக்கள் ஏழை நாடுகளில் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் சுமார் 1100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இத்தடுப்பூசிகள் நியாயமான முறையில் விநியோகம் செய்யப்பட்டிருந்தால், இந்த உலகில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பும் ஒவ்வொரு வயது வந்த நபருக்கும் முழுமையாக அதனை செலுத்தியிருக்க முடியும். அதற்கு பதிலாக, குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் வெறும் 13% பேருக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நோய்தொற்றின் காரணமாக உலகம் முழுவதிலும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 4 குழந்தைகள் தங்களது பெற்றோரை அல்லது பாதுகாவலரை இழந்துள்ளன. இக்குழந்தைகளில் கிட்டத்தட்ட சரி பாதி இந்தியாவில் உள்ளனர். இங்கு 20 லட்சத்திற்கும் கூடுதலான குழந்தைகள் இத்தகைய இழப்பை சந்தித்துள்ளனர்.
கோவிட்-19 நோய்தொற்று தாக்கியபோது, 52% ஆப்பிரிக்கர்கள் சுகாதார வசதியின்றி இருந்தனர். மேலும், தங்களது வேலையை இழந்தாலோ அல்லது நோய்வாய்பட்டாலோ எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி 83% பேர் இருந்தனர்.
நாடுகளுக்கிடையேயான அசமத்துவம்
நோய்த் தொற்றுக்கு முன்பு, பணக்கார மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கிடையே யான அசமத்துவம் குறைந்து கொண்டு வந்தது. இத்தகைய நிலை 30 ஆண்டுகளாக இருந்து வந்தது. கோவிட்-19 இத்தகைய போக்கை தலைகீழாக மாற்றியது. குறைந்த மற்றும் நடுத்தர வருமானத்தை கொண்ட நாடுகள் 10 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ள அதே நேரத்தில், பணக்கார நாடுகள் மீண்டும் முன்னேறுகின்றன.
குறிப்பாக தற்போது பல நாடுகள் எதிர்கொள்ளும் பெரும் கடன் சுமை கவலையை அளிக்கிறது. இச்சுமை, மீட்சிக்கான எந்த நம்பிக்கையையும் செல்லரித்துப் போகச் செய்வதோடு, விலைவாசி உயர்விலிருந்து தங்களது குடிமக்களை பாதுகாக்க பல நடவடிக்கை களை மேற்கொள்வதையும் தடுக்கிறது. இக்கடனை செலுத்துவது மிகவும் செலவு பிடித்த ஒன்றாக அரசுக்கு ஆகி வருகிறது. சுகாதாரம், கல்வி போன்ற பொதுச் சேவைகளை பெருமளவில் வெட்டிச் சுருக்கிட நிர்பந்திக்கிறது. மேலும், தங்களது குடிமக்களுக்கு நிதியுதவி அளிக்கவும் இயலாததாக அரசுகளை ஆக்குகிறது.
16 மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 14 நாடுகள், தொற்றுநோய் காரணமாக 2020ஆம் ஆண்டில் மட்டும் அப்பகுதி முழுவதிலும் இழந்த 4800 கோடி டாலர்கள் அளவிலான இடைவெளியை குறைக்கும் முயற்சியில், அடுத்து வரும் ஐந்தாண்டுகளில் தங்களது தேசிய வரவு செலவுத் திட்டத்தை 2680 கோடி டாலர்கள் வெட்டிச் சுருக்க விரும்புகின்றன.
2022ஆம் ஆண்டில் உலகின் அனைத்து ஏழை நாடுகளின் கடன் சேவை 4300 கோடி டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது அந்நாடுகளின் உணவு இறக்குமதி தொகையில் கிட்டத்தட்ட பாதி அளவோடு, சுகாதார பாதுகாப்புக்கு அரசு செலவிடும் தொகைக்கு சமமானதாகும். 2021ஆம் ஆண்டில், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் சுகாதாரம், கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கான ஒட்டுமொத்த செலவினங்களின் அளவில் 171% என்ற அளவில் அவற்றின் கடன் உள்ளது.
சர்வதேச நிதி நிறுவனத்தால் அளிக்கப்பட்ட கோவிட்-19 கால கடன்களில் 87% நிபந்தனைகளோடே கொடுக்கப்பட்டுள்ளன. இக்கடன் தொகையைப் பெற்றுக் கொள்ளும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள், கடுமையான சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அந்நிபந்தனை ஆகும். இது வறுமையையும், அசமத்துவத்தையும் முன்னைக்காட்டிலும் மேலும் அதிகரிக்கவே செய்யும்.
குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் 60% நாடுகள் தற்போது கடன் தொல்லையின் விளிம்பில் உள்ளன.